முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Friday, September 18, 2009

இடம்பெயர் முகாம் மக்கள் விரக்தியின் விளிம்பில்: நேரில் பார்த்த ஐ.நா. விசேட பிரதிநிதி; இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் பொறுமையிழந்த நிலையிலும் விரக்தியடைந்த நிலையிலும் காணப்படுகின்றனர் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நேற்று முகாம்களிலுள்ள மக்களை நேரில் பார்வையிட்ட ஐ.நா.சபையின் விசேட பிரதிநிதி லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை இயன்றவரை விரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல வழிசெய்ய வேண்டும். முகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதொரு உணர்வை தரமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அவரது அமைச்சில் நேற்றிரவு சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நேற்று முன்தினம் புதனன்று இலங்கை வந்த லின் பஸ்கோ நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் இடம்பெயர்ந்த முகாம்களிலுள்ள மக்களையும் சந்தித்து நேரடியாக கலந்துரையாடியிருந்தார்.

முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பில் உங்களது அவதானிப்பு எத்தகையது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் பொறுமையிழந்த நிலையிலும் விரக்தியடைந்த நிலையிலும் காணப்படுகின்றனர்

முகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதல்ல என்பதை உலகின் பல்வேறு முகாம்களுக்கும் சென்றவன் என்றவகையில் நான் அறிந்துள்ளளேன். முகாம்களில் வாழ்வது நல்ல உணர்வை என்றுமே தந்ததில்லை. சொந்த இடங்களை விட்டு முடக்கப்பட்ட நிலையில் முகாம்களில் வாழ்வது என்றுமே நல்ல உணர்வை தரமாட்டாது.

எனவே, இயன்றவரையில் முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அரசாங்கத்திற்கு பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் உள்ளதென்பதை நான் அறிவேன். இருப்பினும் பருவமழைக்காலம் அண்மித்துள்ள நிலையில் முகாம்களிலுள்ள மக்களை அங்கிருந்து விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவற்கு அரசாங்கம் வெளியிட்ட 180 நாள் வரைவுத்திட்டத்தில் பாதிநாட்கள் கடந்து விட்ட நிலையில் மீள்குடியேற்றம் தொடர்பான உங்கள் மதிப்பீடு என்ன என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த லின் பஸ்கோ, என்னுடைய மதிப்பீடு முடிவடையும் வரையில் நான் இதுதொடர்பில் கருத்து கூறுவதற்கு காத்திருக்க வேண்டும்.

லின் பெஸ்கோ இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்துறை உதவிச்செயலாளர் லின் பாஸ்கோ இன்று ஜனாதிபதி மற்றும் அரசியல் கட்சிகளுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள ஐ.நா.சபையின் பிரதிநிதி பாஸ்கோ, முகாம்களில் தாம் அவதானித்த விடயங்கள், அகதிகளின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, இலங்கை அரசு மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பார் என்று ஐ.நா.வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

அத்துடன் அவர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் சந்திப்பை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment