முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Wednesday, July 8, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-9: ஐரோப்பியர் ஏற்படுத்திய விளைவுகள்

போர்த்துக்கீசியரின் வருகையால் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவுகள் இலங்கையில் தலையெடுத்தது. அடுத்து அவர்களின் மொழியும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் திணிக்கப்பட்டன. இவர்களின் 150 ஆண்டு ஆட்சிக் காலத்தில்தான் நிலங்களைப் பதிவு செய்யும் முறை அமலாகிறது.
ஒல்லாந்தர்கள் காலத்திலே இலங்கையில் வாழ்வோருக்கு முற்றிலும் புதியதானதொரு நீதித்துறை மாற்றங்கள் சட்டமாகின்றன. மதச் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டார்கள்.

ஒல்லாந்தர்கள் ஆட்சியைப் பிடிக்கும் முன்னர் வரை இந்து மதத்தவருக்கோ, முஸ்லிம் மதத்தினருக்கோ தனியாகச் சட்டங்கள் எதுவுமில்லை. ஒல்லாந்தர் காலத்தில்தான் இந்துச் சட்டம் என்றும், முஸ்லிம் சட்டமென்றும் புதிய சட்டங்கள் அவர்களது சமூகப் பழக்க வழக்கங்களையொட்டி வரையறுக்கப்படுகின்றன. புதிதாகச் சிங்களப் பகுதிகளில் இஸ்லாமும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

ஆங்கிலேயர் காலத்தில் பைபிள் சிங்களத்திலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. கிறிஸ்தவம் வேகமாக வேரூன்றி வருவது கண்டு கொதித்த ஆறுமுகநாவலர் இந்துமதத்தைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் சைவசமய நூல்களை வெளியிட முனைந்தார். ""கிறிஸ்தவ மதமும் இந்துமதமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் சேவையில் ஈடுபட மதகுருமாரான அநகாரீக தர்மபாலா புத்த மதத்தை வளர்க்க இயக்கம் நடத்தினார். அதற்கெனச் "சிங்கள பெüத்தயா' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தினார். முஸ்லிம்களின் கடைகளைப் பகிஷ்கரிக்கும்படி தனது பத்திரிகைகளிலும், வெளியீடுகளிலும் அவர் எழுதினார்.

தர்மபாலாவின் தந்தை டொன் கறோலிஸ் தளவாடக் கடை ஒன்று வைத்திருந்தார். இவருக்குத் தர்மபாலாவைத் தவிர்த்து இரு மகன்கள் உண்டு. சிங்கள வர்த்தகர்களின் பண உதவியால் இயங்கி வந்த புத்த மறுமலர்ச்சி இயக்கம் அவர்களின் வியாபார வேலைகளுக்கு ஆதரவு வழங்கியது. இவர்களை தேசபக்தர்கள் என்றும் நியாயமான வழியில் பணம் சம்பாதிப்போர் என்றும் புகழ்ந்தது. அதே தர்மபாலா இந்தியா போன்ற இடங்களில் இருந்து வந்து இலங்கையில் வியாபாரம் செய்தவர்களை அநியாயமாகப் பணம் சம்பாதிப்போர் என்று சாடினார்.

சிங்கள நாவலின் தந்தை எனக் கூறப்படும் பியதாசசிரிசேன தனது "சிங்கள ஜாதிய' என்ற பத்திரிகையில் மேலைக் கலாசாரத்திற்கு எதிராக எழுதிய அதே வேளையில், சிங்களவர் அல்லாதோரையும் தாக்கியும் எழுதினார்.

இலங்கையின் வரலாற்றிலேயே இரு இலங்கைச் சமூகங்களிடையே ஏற்பட்ட முதலாவது கலவரம் 1915-ஆம் ஆண்டின் சிங்கள-முஸ்லிம் கலவரமாகும். சிங்களவர்கள் அல்லாதவர்கள் என்ற காரணத்தினால் முஸ்லிம்களின் கடைகள் தாக்கப்பட்டன. அவர்களின் சொத்துக்களும் பறிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரங்களின் பின்னால் சிங்கள வியாபாரிகள் பலர் இருந்தனர்.

இந்த கலவரத்தின்போது சிங்களத் தலைவர்களாக மலர்ந்து கொண்டிருந்த எஃப்.ஆர்.சேனாநாயக்க, டி.எஸ்.சேனா நாயக்க போன்றோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை அரசியல் கைதிகளாக்கியது அரசு. அரசுக்கெதிராகச் சதி செய்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில் 1915-ஆம் ஆண்டின் கலவரங்கள் சிங்களவர்களின் உள்நாட்டு இனவாதத்தின் ஒரு பயங்கரமான வெளிப்பாடு ஆகும். இதுவே சிங்கள இனவாதத்தின் முதலாவது (ஆங்கில ஆட்சியில்) வெளிப்பாடும் ஆகும்.

கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி குறிப்பிடத்தக்க தமிழர் தலைவரான பொன்னம்பலம் இராமநாதன் பிரிட்டிஷ் அரசிடம் வாதிட்டு வெற்றியும் பெற்றார். அவர் லண்டனிலிருந்து திரும்பியபோது சிங்களவர்கள் சாரட்டு வண்டி ஒன்றில் பொன்னம்பலம் இராமநாதனை அமரவைத்து, வடம்பிடித்து இழுத்து வந்து ஆனந்தக் கூத்தாடினார்கள்'' என்று சமுத்திரன் எழுதிய "இலங்கைத் தேசிய இனப்பிரச்னை' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொனமூர் கமிஷன் சிபாரிசு செய்த ஷரத்துக்களின்படி பார்த்தால் "டொனமூர் மீன்ஸ் டமிள்ஸ் நோ மோர்' என்று கூறியதுடன் மேற்கண்ட நிகழ்ச்சிக்காக பொன்னம்பலம் இராமநாதன் பின்னாளில் வருத்தமும் பட்டார்.

போர்த்துகீசிய, ஒல்லாந்துச் சட்டங்கள் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளன. இவர்களின் கலாசாரத் தாக்கத்தைவிட ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் நிகழ்ந்த தாக்கங்களே அதிகம். இலங்கையில் இன்று கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் (7சதவிகிதம்) இருப்பதற்கு காரணம் ஆங்கிலேயரே. தமிழர்-ஆங்கிலேயர், சிங்களர்-ஆங்கிலேயர் கலப்புத் திருமணங்கள் வெகுவாக ஊக்கப்படுத்தப்பட்டன. பிரபல தத்துவ ஞானியான ஆனந்த குமாரசாமியின் தாயார் ஓர் ஆங்கில மாது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடித்ததும் சர்ச்சுகளும், ஆங்கிலப் பள்ளிகளும் மளமளவென்று எழுந்தன. நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்து அலுவலர் பிரிவு என ஒரு புதிய வர்க்கத்தையே ஏற்படுத்தினர்.

ஆங்கிலமொழித் திணிப்பு என்றளவோடு நின்றுவிடாது, அதைப் படித்தால் வேலை, அதற்கேற்ற ஊதியம் என்றும் கவர்ச்சியூட்டினர். இதனால் பெரும்பாலோர் ஆங்கிலம் கற்கவும், புதிய வேலைகள் பெறவும் ஆர்வம் காட்டினர். இதிலும் குறிப்பாகத் தமிழர்களுக்கு ஆங்கிலமொழி சிங்களவரைக் காட்டிலும் சிறப்பாக வந்தது. அதனால் அலுவலகங்களில் தமிழர்களே அதிக இடம் பிடித்தனர்.

ஆங்கிலேயர் செய்த மிகப் பெரிய செயல் இலங்கையின் பொருளாதார அமைப்பையே மாற்றியது. இங்கிலாந்தில் எந்தப் பொருளுக்கு கிராக்கியுண்டோ, எந்தப் பொருளைப் பயிர் செய்ய வாய்ப்பு அதிகமில்லையோ-அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் வகையில் இந்தப் பொருளாதாரக் கொள்கை அமைந்தது. இதன் மூலம் விவசாயப் பொருளாதாரம் அழிந்து தோட்டப் பயிர் பொருளாதாரம் இலங்கையில் உருவாயிற்று.

இலங்கையின் அன்றாட மக்களின் உணவுக்கு மூலாதாரமான அரிசி, பருப்பு முதலியவைகளை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யுமளவு நெல் உற்பத்தி குறைந்தது. பணப்பயிர்களான தேயிலை, காபி, ரப்பர் முதலியவற்றை விளைவிக்கும் வகையில் இவர்களது செயல் இருந்தது. இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆங்கிலேயர் புதிதாகச் சில நிலச்சட்டங்களை வகுத்தனர். அதில் ஒன்று மன்னர் நிலச்சட்டம் (1840). இதன் மூலம் விவசாய நிலங்கள், காடு வளர்ச்சி என்ற பெயரில் பிடுங்கப்பட்டது.

இப்படிப் பிடுங்கப்பட்ட நிலங்களில் தோட்டப் பணப் பயிர்களான தேயிலை, ரப்பர், காபி, தென்னை முதலியவற்றைப் பயிர் செய்தார்கள். இச்சட்டத்தின் மூலம் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த சிங்களவர்களும், தமிழர்களுமாவர். இவர்கள் காட்டையும், மலையையும் சார்ந்து வாழ்ந்தவர்கள்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் இத்திட்டத்தில் பாதிப்பு எதையும் அடையவில்லை. காரணம், அந்தப் பகுதியில் மலைகளோ, காடுகளோ இல்லை. அப்பகுதி அனைத்துமே பாசன வசதி கொண்ட நிலங்கள் ஆகும்.
வியாபாரம், நிதி மூலதனம், மேல்நிலை ஆதிக்கம் யாவுமே ஆங்கிலேயர் வசமிருந்தது. இதனால் சிங்களவர்களாலும், தமிழர்களாலும் பெரிய அளவில் வியாபாரத்துறையில் ஈடுபடவோ, தொழில் துறையைத் துவங்கவோ இயலவில்லை. இதனாலும் சிங்களவர்கள் இந்தக் காடு ஆக்கிரமிப்பை எதிர்த்தனர். தங்களது எதிர்ப்பை தோட்டங்களில் வேலை செய்ய மறுப்பதன் மூலம் வெளிப்படுத்தினர். ஆங்கிலேயர்களோ இதை எப்படியும் சமாளித்தாக வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார்கள்.



சர்.பொன்னம்பலம் இராமநாதன், இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு சட்டசபை பிரதிநிதி என்றிருந்தபோது இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரை இருமுறையும் எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர்கள் சிங்களவர்களே! "இந்தியாவில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளியேறு என்று கூறமுடியும். தேளை, பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம்மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும். இது புத்த நெறிக்கோ தருமத்திற்கோ ஒத்துப் போகுமா? இவ்விதம் மலையகத் தமிழ்மக்கள் நலன் கருதி சிங்களச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது இராமநாதனுக்கு வயசு 78. (பக்கம்.1791 சட்டமன்றப்பதிவேடு மூன்று-1928)
நன்றி தினமணி

No comments:

Post a Comment